கோலாலம்பூர், நவ 4 - இவ்வாண்டு அக்டோபர் 15-ஆம் தேதி வரை மலேசியாவில் மொத்தம் 2,132,578 அந்நிய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் பதிவான 2,452,010 தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் 13 விழுக்காடு குறைவாகும்.
இச்சரிவு நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளை பிரதிபலிப்பதாக மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
"தொழிற்சாலைகளில் 622,388, கட்டுமானங்களில் 589,684, சேவைகளில் 390,607, தோட்டத்துறையில் 263,131, விவசாயத்தில் 158,628, அந்நிய வீட்டுப் பணியாளர்கள் 107,375, சுரங்கம் மற்றும் குவாரிகளில் 765 பேர்," என்றார் அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் நாட்டில் துறை வாரியாக உள்ளூர் பணியாளர்களை மேம்படுத்துவதோடு அந்நியத் தொழிலாளர்களைச் சாந்திருப்பதைக் குறைப்பதற்கும் அவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்குமான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பென்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹசிம் எழுப்பிய கேள்விக்கு அப்துல் ரஹ்மான் இவ்வாறு பதிலளித்தார்.
தற்போது அதிகாரப்பூர்வ துறைகளான கட்டுமானம், சேவை, தோட்டத்துறை, விவசாயம் உட்பட சுரங்கம் மற்றும் குவாரி ஆகிய ஆறு முக்கிய துறைகளில் மட்டுமே அந்நிய தொழிலாளர்கள் வேலைக்கு தருவிக்கப்படுகின்றனர்.
அதே நேரத்தில், அதிகாரப்பூர்வமற்ற துறையில் வீட்டுப் பணியாளர்களாக அந்நியர்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா




