ஷா ஆலம், டிச 30: கடந்த டிசம்பர் 18 அன்று போலிப் பணத்தைப் பயன்படுத்தி நகைகளை வாங்க முயன்ற சம்பவம் தொடர்பான வழக்கில், கோல திரங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆடவர் ஒருவரை நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை 33 வயதான அந்நபரை தடுப்பு காவலில் வைக்க மாஜிஸ்திரேட் இஃபா நபிஹா முகமட் இஷாக் உத்தரவிட்டதாக பெரித்தா ஹரியன் செய்தி வெளியிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய விற்பனையாளர் ஒருவர், மாலை 6.31 மணியளவில் தனது துறைக்கு அழைத்து புகார் அளித்ததாகக் கோல திரங்கானு மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அஸ்லி முகமட் நோர் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சந்தேக நபர், பக்கா அருகே உள்ள ஒரு நகை கடையில் சுமார் RM30,000 மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் திருட முயன்ற பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


