கோலாலம்பூர், டிச 17 - உள்ளூர் வெள்ளை அரிசி (BPT) உற்பத்தியை அதிகரிப்பதில் சவால்கள் உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் மலேசியர்களில் 10 முதல் 15 விழுக்காட்டினர் மட்டுமே உள்ளூர் வெள்ளை அரிசியை வாங்குவதாக அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் மானியம் வழங்கினாலும், இறக்குமதி அரிசியின் விலை குறைந்துள்ளதே இந்நிலைக்கு காரணம் என அவர் விளக்கினார்.
மார்ச் மாதம் தொடங்கிய மானிய விலையிலான உள்ளுர் வெள்ளை அரிசித் திட்டம் செப்டம்பரில் முடிவடைந்தது. இந்நிலையில், விலை நியாயமாக இருப்பதையும், கையிருப்பு போதுமான அளவில் உள்ளதையும் உறுதிச் செய்ய, அரிசி கையிருப்பு வழிவகைகளை அரசாங்கம் மறு ஆய்வு செய்யும்.
உள்ளூர் அரிசிக்கான தேவை குறைந்தால், நீண்ட கால அடிப்படையில் உணவு உத்தரவாதம் பாதிக்கப்படும் எனவும் மாட் சாபு எச்சரித்தார். எனவே, மக்கள் உள்ளூர் உற்பத்தியை ஆதரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


