ஷா ஆலம், ஜன 12: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘நூறு குடும்பங்களின் அரிசி சேகரிப்பு, நூறு ஆசீர்வாதங்கள் ஒன்றிணைப்பு’ (Kumpul Beras Seratus Keluarga, Himpun Seratus Keberkatan) என்ற திட்டத்தை கின்ராரா மாநில சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இதில், வாழ்வாதாரப் பகிர்வின் அடையாளமாக, பொதுமக்கள் ஒரு கைப்பிடி அரிசியை வழங்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது சமூக சேவை மையம் தற்போது வெள்ளை அரிசி நன்கொடைகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், பிப்ரவரி 4ஆம் தேதிக்கு முன் பொதுமக்கள் தங்களின் நன்கொடைகளை வழங்குமாறும் இங் ஸீ ஹான் முகநூலில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு, சேகரிக்கப்பட்ட அரிசியை ஒன்றாக கலந்து விநியோகிக்கும் செயல்பாடுகளை உள்ளடக்கிய வகையில், இத்திட்டம் மேலும் பெரிய அளவில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டம், சமூகத்தில் ஒன்றுபட்ட உணர்வையும் பரஸ்பரப் பகிர்வையும் வளர்க்கும் நோக்கில், சீனப் புத்தாண்டை முன்னிட்டு அவர் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு, இந்த திட்டம் வரலாற்றுச் சாதனையை படைத்தது. 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து சுமார் 3,000 கிலோகிராம் அரிசி நன்கொடையாக சேகரிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.


