கோத்தா பாரு, ஜூன் 29: தாய்லாந்தின் தாக்பாய் (Takbai), கம்போங் சாப்போம் (Kampung Sapom) பகுதியில் இன்று மதியம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மலேசியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
38 வயதுடைய அந்த ஆடவர் உடலின் பல பகுதிகளில் காயமடைந்துள்ளதுடன், அவர் பயணித்த வாகனமும் இந்த வெடிவிபத்தில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
காயமடைந்த அந்த மலேசியர் தற்பொழுது சிகிச்சைக்காக நாரதிவாட் (Narathiwat) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வெடிகுண்டு காரிலேயே பொருத்தப்பட்டிருந்ததா அல்லது சாலையோரமாக வைக்கப்பட்டிருந்ததா என்பது போன்ற மேல் விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை. பாதிக்கப்பட்ட அந்த மலேசியர் சாபா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




