கோலாலம்பூர், நவ 4 - பூடி மடாணி ரோன் 95 திட்டத்தின் கீழ் தகுதியுள்ள இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு ரோன் 95 பெட்ரோலின் வரம்பை, மாதத்திற்கு 800 லிட்டராக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் செய்த மேல்முறையீடுகளை அரசாங்கம் ஆராய்ந்த பின்னர், இம்முடிவு எடுக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த மாதம் மிகவும் தீவிரமாக இ-ஹெய்லிங் பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களுக்கு கூடுதல் தகுதி வரம்பை அதாவது மாதத்திற்கு 300இலிருந்து 600 லிட்டராக அரசாங்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து 58,000 ஓட்டுநர்கள் பயனடைவதாக பிரதமர் தெரிவித்தார்.
"அதே நேரத்தில், இலக்கிடப்பட்ட பெட்ரோல் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் உதவித் தொகைக்கு உட்படுத்தப்பட்ட ரோன்95-ஐ பெற தகுதியுள்ள வாகனங்களில் விமான நிலையத்திற்கான டாக்சிகளையும் பட்டியலிட அரசாங்கம் ஒப்புக் கொண்டது," என அவர் கூறினார்.
பூடி மடாணி ரோன் 95 திட்டத்தில் விமான நிலைய டாக்சி ஓட்டுநர்கள், இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் படகு பயனர்களின் தகுதி தொடர்பாக எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, புக்கிட் பென்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷ்செர்லீனா அப்துல் ராஷிட் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
--பெர்னாமா




