குவாந்தான், நவ 3: பணி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், போலி தொலைபேசி அழைப்பால் RM200,000க்கும் மேல் இழந்தார்.
காப்பீட்டு நிறுவனம் சார்பாக அழைப்பதாகக் கூறிய நபர் ஒருவரிடமிருந்து 59 வயதான அந்த முன்னாள் விரிவுரையாளருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
அந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் பெயரில் RM68,000 பணக் கோரிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
பிறகு, அந்த அழைப்பு காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை பொதுச்சாட்டாளர் (deputy public prosecutor) எனக் கூறியவர்களிடம் இணைக்கப்பட்டது. அவர்கள், பாதிக்கப்பட்டவர் ``money laundering`` ஈடுபட்டுள்ளதாக கூறினர்.
அவர்கள், பாதிக்கப்பட்டவரிடம் விசாரணைக்காக எனக் கூறி, ஒரு புதிய வங்கிக் கணக்கைத் திறக்க சொல்லியுள்ளனர். பின்னர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர் 9 ஏப்ரல் முதல் 12 ஜூன் வரை மொத்தம் 10 முறை பணத்தை அனுப்பியுள்ளார்.
சந்தேகநபர்கள் மீண்டும் பணம் கேட்டபோது, அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, குவாந்தான் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 420இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
– பெர்னாமா




