கோலா சிலாங்கூர், அக்டோபர் 12 - 17-வது சபா மாநிலத் தேர்தலில் போட்டியிட அம்னோவைத் தவிர்த்து, மசீச மற்றும் PBRS எனும் சபா ஐக்கிய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களையும் வேட்பாளர்களாக தேசிய முன்னணி களமிறக்கவிருக்கிறது.
சபாவில், இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அங்கு மஇகா வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.
தேசிய முன்னணி வேட்பாளர்களில் பெரும்பாலோர் புதிய முகங்களாக நிறுத்தப்படும் வேளையில், பழைய முகங்களையும் தக்கவைத்துக்கொள்வோம். மேலும், தேசிய முன்னணி நிபுணர்களையும் அதிக அளவில் வேட்பாளர்களாகக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இன்று கோலா சிலாங்கூரின், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் UiTM-மில் நடைபெற்ற பூமிபுத்ரா பொருளாதார உருமாற்று திட்டம் 2035 நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அவ்வாறு கூறினார்.
வேட்புமனு தாக்கலின் போது, போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணி இடையிலான ஒத்துழைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டியிடும் தொகுதிகளில் எந்த முரண்பாடும் ஏற்படவில்லை எனவும் டாக்டர் அஹ்மாட் மேலும் விவரித்தார்.
-- பெர்னாமா