கோல சிலாங்கூர், அக். 3 - 'டி.ஆர். கேங்' என்ற திட்டமிட்ட குண்டர் கும்பலின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
எஸ்.சுகுமாறன் (வயது 45), எஸ்.ராஜா (வயது 27), எம்.தேவ குமரன் (வயது 44) மற்றும் முகிலன் (வயது 35) ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நால்வராவர்.
அந்நால்வருக்கும் எதிராக நீதிபதி நூருல் மர்தியா முகமது ரெட்சா முன்னிலையில் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டன. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2025 செப்டம்பர் 11, வரை இங்குள்ள ஜெராம், சுங்கை ஜங்குட்டில் உள்ள ஒரு கடல் உணவகத்தில் "கேங் டிஆர்" என்ற திட்டமிட்ட குண்டர் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் 130வி (1) [சட்டம் 574] பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையை கிள்ளான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு துணை அரசு வழக்கறிஞர்கள் ஷபிக் ஹாசிம் மற்றும் லினா ஹனினி இஸ்மாயில் ஆகியோர் நீதிபதியிடம் கோரினர்.
சுகுமாரன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் டத்தோ எஸ். சிவகுமார் மற்றும் ஹாசிக் முகமது ஷஹால் ஆகியோர் விண்ணப்பத்தை எதிர்க்கவில்லை.
அதே நேரத்தில் மற்ற மூன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
நீதிமன்றம் அரசு தரப்பின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது.