ஷா ஆலம், செப், 29 - தமிழ்நாடு கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
அக்கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த துயரச் சம்பவம் 40க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது. இது நம் அனைவரையும் மனம் வருந்தச் செய்யக்கூடிய ஒரு பேரிழப்பாகும்.
இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எங்கிருந்தோ இருந்தாலும் ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் பாதுகாப்பையும் சரியான திட்டமிடலையும் உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் நமக்கு வலியுறுத்துகிறது.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தலைவர்களும் போலீஸ் துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
பந்திங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாப்பாராய்டு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.