அலோர் காஜா, செப். 9 - கேபிள் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடக்க காணப்பட்டார். இச்சம்பவம் இங்குள்ள ஜாலான் பாடாங் கெலாடி, டுரியன் துங்கால், கோ-கார்ட் பந்தயத் தடப் பகுதியில் நேற்று பிற்பகல் 2.14 மணிக்கு நிகழ்ந்தது.
தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்பி. ) மின் உற்பத்தி நிலையத்தின் முன்வாயில் கதவு திறந்திருந்தத நிலையில் அங்கு மின் கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அஸ்ருல் முகமது தெரிவித்தார்.
ஐ.நா.வின் அகதிகளுக்கான அட்டை வைதாதிருக்கும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த சுமார் 29 வயதுடைய நபர் மின் நிலையத்திற்கு அடுத்துள்ள வடிகாலில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் கேபிளைத் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், போலீஸ் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் குற்றவியல் சம்பவங்களுடன் தொடர்புடை எந்த தடயங்களும் இல்லை என்றும் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உதவி மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாகவும் அஸ்ருல் கூறினார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர் காஜா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது.
கேபிள் திருடும்போது மின்சாரம் தாக்கியது- மியன்மார் ஆடவர் பலி
9 செப்டெம்பர் 2025, 6:05 AM