கோலா திரங்கானு, ஆகஸ்ட் 19: போலி முதலீட்டு திட்டத்தால் ஏமாற்றப்பட்டு அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் RM94,463 இழந்தார்.
ஆகஸ்ட் 14 அன்று, 59 வயதான அந்த நபர் டெலிகிராம் செயலியில் ஒரு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்ததாகக் கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.
சந்தேக நபர் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றி, பாதிக்கப்பட்டவர் KAS Investment Funds Bhd என்ற பெயரில் முதலீட்டு வலைத்தளத்தில் பதிவு செய்ததாக அவர் கூறினார்.
"கோலா நெரஸில் உள்ள பத்து ராகிட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், ஆரம்ப முதலீடு RM200 செய்தார். மேலும், அவரது முதலீட்டுக் கணக்கில் சேமிக்கப்பட்ட இலாபத்தின் அளவு அதிகரித்ததைக் கண்டறிந்தார்.
"அதிக இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர் ஆகஸ்ட் 14 முதல் 17 வரை ஆறு வெவ்வேறு கணக்குகளில் மொத்தம் RM94,263 கூடுதல் முதலீடுகளைச் செய்தார்," என்று அஸ்லி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முதலீட்டுக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல் போன பிறகுதான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்ததாக அஸ்லி கூறினார்.
"கண் இமைக்கும் நேரத்தில் தனது ஓய்வூதியம் RM94,463 ஐ இழந்த பிறகு, நேற்று இரவு 8.17 மணிக்கு காவல்துறையில் புகார் அளித்தார். "இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது," என்று அஸ்லி கூறினார்.