கோலாலம்பூர், ஜன 27 - இன்று நாடு முழுவதிலும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் விவசாயிகள் பங்கேற்ற பேரணி புத்ராஜெயாவில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு நடைபெற்றது.
இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியான்டோ மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வப் பயணத்தைத் தொடர்ந்து, அப்பேரணி இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த பேரணி குறித்து வெகுநாள்களுக்கு முன்பே கடிதம் வாயிலாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும், எனினும், அதிபரின் அலுவல் பயணம் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படாதது வருத்தத்தை அளிப்பதாகவும், PeSAWAH எனப்படும் மலேசிய நெல் விவசாயிகள் சகோதரத்துவ அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், காவல்துறையினர் பாதுகாப்புடன் பெர்டானா புத்ராவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அந்த அமைப்பின் 10 மாநில பிரதிநிதிகள் மனுவைச் சமர்ப்பித்தனர்.
தங்கள் தரப்பு எவ்வித ஆர்ப்பாட்டத்தையும், குறிப்பாக வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையின்போது எந்தத் தொந்தரவையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் PeSAWAH தெரிவித்துள்ளது.


