ஷா ஆலம், ஜன. 27- சட்டவிரோதமான முறையில் நில உரிமை
மாற்றத்தைச் செய்த தரப்பினரைக் கண்டு பிடிக்க மாநில அரசு நிறுவனம்
மீது உள்தணிக்கை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது போன்றப் பிரச்சினைகளை முழுமையாக களைவதற்கும் மீண்டும்
நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கும் அனைத்து துறைகளிலும்
இத்தகைய உள்கணக்காய்வு மற்றும் விசாரணையை நடத்துவதற்கான
சாத்தியம் உள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளை எளிதில் கண்டறிவதற்கு
ஏதுவாக இணைய நில மேலாண்மை (இ-தானா) முறை தொடர்பான சீரான
செயலாக்க நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) கடுமையாக்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.
இந்த முறையிலும் ஆபத்துகள் உள்ளன. நாம் சிறப்பான முறையில்
நிர்வகித்தால் அவற்றை கண்டறிய முடியும் என்று இங்குள்ள ஜூப்ளி
பேராக் மண்டபத்தில் அரசு ஊழியர்களுக்கு 2025ஆம் ஆண்டு
சிறப்புரையை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
குறிப்பிட்டார்.
நில உரிமையை மாற்றும் இதர தரப்பினரை அடையாளம் காண்பதற்கு
ஏதுவாக நில மற்றும் மாவட்ட அலுவலகம் உள்பட அனைத்து அரசு
துறைகளும் உள் தணிக்கை மற்றும் விசாரணையை மேற்கொள்ள
வேண்டும் என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை
வலியுறுத்தியிருந்தது.
இதர மாவட்ட நில அலுவலகங்கள் இத்தகைய நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டால் அதன் தொடர்பில் விரிவான விசாரணையை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக அதன் இயக்குநர்
டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
நில உரிமையை மாற்றும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் கும்பலுக்கு எதிராக கடந்தாண்டு செப்டம்பர் மாதம்
முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 17 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.


