ஷா ஆலம், ஜன. 27- அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் 50,000 கோடி
வெள்ளி பொருளாதார வளர்ச்சிக்கான இலக்கை நோக்கி சிலாங்கூர்
சரியான தடத்தில் பயணிக்கிறது.
செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) போன்ற சிக்கலான
தொழில்துறைகள் இந்த வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்குவதாக
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இருப்பினும், கடந்தாண்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு 40,000 கோடி
வெள்ளி பங்களிப்பை மாநில அரசு வழங்கிய போதிலும் மாநில
நிர்வாகமும் மக்கள் பிரதிநிதிகளும் எப்போதும் விழிப்புடன் இருக்க
வேண்டும் என்பதோடு இந்த வளர்ச்சி குறித்து மனநிறைவும் கொண்ட
விடக்கூடாது என வலியுறுத்தினார்.
இதுவொரு கூட்டு முயற்சியாக இருந்தாலும் பெருந்தொற்று, வெள்ளம்
உள்ளிட்ட பல இடர்பாடுகளை நாம் எதிர்கொண்டோம் என்று அவர்
சொன்னார்.
இறைவன் அருளால், கடந்தாண்டு நாம் 285 கோடி வெள்ளி வருமானத்தை
பதிவு செய்தோம். கடந்த 2020ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிக
அதிக வருமானம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த 2017ஆம் ஆண்டு
பதிவான 281 கோடி வெள்ளி வருமானத்தை இது மிஞ்சி விட்டது என்றார்
அவர்.
அதே சமயம், கடந்த 2018ஆம் ஆண்டில்தான் நாம் மிகவும் குறைவான
வருமானத்தை ஈட்டினோம் என்று அந்த ஆண்டில் வசூலிக்கப்பட்ட 200
கோடி வெள்ளி வருமானத்தைச் சுட்டிக்காட்டி அவர் குறிப்பிட்டார்.
நாம் மனநிறைவு கொண்டு விடலாம் என்பது இந்த சாதனையின் பொருள்
அல்ல. நாம் எப்போம் விழிப்புடன் இருக்கும் அதே வேளையில் சமூக
நலத் திட்டங்கள் உள்ளிட்ட முன்னெடுப்புகளுக்கு அதிகம் செலவிடுவதற்கு ஏதுவாக வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் இன்று
நடைபெற்ற மாநில அரசு ஊழியரகளுடனான ஒன்று கூடும் நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விரிவான முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக மாநில அரசு
பெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக கூறிய அமிருடின், 2021ஆம் ஆண்டு
தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு மேம்பாட்டுத் திட்டங்களை மாநில அரசு
வரைய இந்த திட்டம் பெரிதும் துணை புரிந்தது என்றார்.


