ஷா ஆலம், ஜன. 24- டிங்கி பரவலைக் கையாள்வதற்கான முயற்சியாக கிள்ளான் அரச மாநகர் மன்றம் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி சமூகப் பங்கேற்பை உறுதிசெய்யவுள்ளது.
மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் டிங்கி காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் கூறினார்.
உள்ளூர் சமூகங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இலக்கு தரப்பினரையும் நாங்கள் இதில் உள்ளடக்கியுள்ளோம் என்று அவர் சொன்னார்.
அமல்படுத்தப்படும் திட்டங்களில் கலந்துரையாடல் மன்றங்கள், விளக்கங்கள், கேள்வி பதில் அமர்வுகள், கண்காட்சிகள், வினாடி வினாக்கள் மற்றும் மறுசுழற்சி போட்டிகள் ஆகியவை அடங்கும். இது டிங்கி அபாயத்திற்கு எதிராக பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் அக்கறை வாய்ந்த சூழலை உருவாக்குகிறது என்றார் அவர்.
இன்று கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் மாதாந்திர ஒன்றுகூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிள்ளான் பகுதியில் டிங்கி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்தாண்டு 8,202 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.


