ஈப்போ, ஜன 24: மாற்றுத்திறனாளிகளின் ஓட்டுநர் உரிமத்தை திரும்பப் பெறுவது அல்லது ரத்து செய்வது போன்ற கொள்கையை அரசாங்கம் பின்பற்றவில்லை.
ஆனால், குறிப்பிட்ட சம்பவங்களின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
''பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்தும் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். பேச முடியாத, காது கேளாத இ-ஹெய்லிங் சேவை ஓட்டுநர்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிமம் வழங்குகிறோம், '' என்று அவர் கூறினார்.
ஈப்போவில் நடைபெற்ற ஈப்போ சென்ட்ரல் நிறுவனம் மற்றும் Country Annexe நிறுவனம் இடையிலான ஈப்போ சென்ட்ரல் மேம்பாட்டு பரிந்துரைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் அந்தோணி லோக் வ்வாறு தெரிவித்தார்,
கடந்த ஜனவரி 17ஆம் தேதி, திரங்கானுவில் உள்ள சுக்கையில் சந்தை ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மோட்டர் சைக்கிள் ஓட்டுநரை உட்படுத்திய பரவலான சம்பவத்தைத் தொடர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று உறுதிப்படுத்தப்படும் தனிநபர்களின் உரிமத்தை அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற பயனிட்டாளர் சங்கம் ஒன்றின் பரிந்துரை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


