காஜாங், ஜன. 17- வீட்டைத் தளமாகக் கொண்ட வியாபார நடவடிக்கைகள்
அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அத்தகைய
வியாபாரங்களுக்கான வழிகாட்டியை மறுஆய்வு செய்து
ஒருமுகப்படுத்துவது குறித்து சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருகிறது.
வருமானத்தை ஈட்டுவதற்காக குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று
காலத்தில் வீடுகளில் தேநீர் விடுதிகள் மற்றும் உணவுக் கடைகளை
நடத்தும் விவகாரத்தில் மாநில அரசு விட்டுக கொடுக்கும் போக்கை
கடைபிடித்ததாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
அந்நிலை இன்றளவு நீடிக்கிறது. ஆயினும், வீட்டிலிருந்து
மேற்கொள்ளப்படும் வியாபாரத்திற்கு தற்காலிக உரிமம் வழங்குவது
சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களின் விவேகத்திற்கு உட்பட்ட ஒன்றாகும்
என அவர் தெரிவித்தார்.
அந்த வியாபாரம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு பொருத்தமானதா என்பதை
தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்று நேற்று இங்கு
நிகழ்வொன்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
கூறினார்.
அத்தகைய வர்த்தக நடவடிக்கைகளுக்கு லைசென்ஸ் வழங்குவதில்
சம்பந்தப்பட்ட இடத்தின் நிலத்தகுதி, மக்கள் தொகை, போக்குவரத்து
நெரிசல் உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது
என்று அவர் சொன்னார்.
அனைத்து வீடுகளும் ஒரே மாதிரியாவை அல்ல. சில லோட் நிலங்களில்
அல்லது மக்கள் நெரிசல் இல்லாத இடங்களில் உள்ளன. சில அடுக்குமாடி
கட்டிடங்களுக்கு அருகில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்
விதத்திலும் அண்டை அயலாருக்கு சொந்தரவு தரும் வகையிலும்
உள்ளன என்றார் அவர்.
ஆகவே, இந்த விஷயத்திலும் ஒவ்வோரு விண்ணப்பத்தையும் பரிசீலிக்க
வேண்டும். இந்த விவகாரத்தில் வழிகாட்டியை உருவாக்குவதற்காக
சந்திப்புக் கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்தவிருக்கிறோம் என்று அவர்
சொன்னார்.


