ஷா ஆலம், ஜன 9- பண்டார் சவுஜானா புத்ராவிலுள்ள குழந்தை காப்பகம்
ஒன்றில் நான்கு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து மாநில
அரசு கவலை கொண்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட
வேண்டும் என்பதோடு குற்றத் தன்மை இருக்கும் பட்சத்தில் சமூக நலத்
துறை இதுகுறித்து போலீசில் புகார் செய்ய வேண்டும் என சமூக நலத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். இந்த
மரணத்தில் குற்றத் தன்மை ஏதுவும் இருக்கும் பட்சத்தில் காவல்
துறையினர் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சமூக நலத்துறை புகார்
செய்ய வேண்டும் என்று மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்ட போது
அவர் தெரிவித்தார்.
மழலையர் காப்பகம் ஒன்றிலிருந்து சுயநினைவற்ற நிலையில் குழந்தை
ஒன்று கொண்டு வரப்பட்டது தொடர்பில் மருத்துவர் ஒருவர் புகார்
செய்துள்ளதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிடெண்டன் அக்மால்ரிஸால் ராட்ஸி முன்னதாக க் கூறியிருந்தார்.
குழந்தை பராமரிப்பு மையங்களின் பாதுகாப்பு மீது மாநில அரசு எப்போதும்
கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அன்ஃபால் கூறினார். அத்தகைய
மையங்களின் பதிவு எளிதாக்குவதற்கு ஏதுவாக வழிகாட்டிகளை
ஒருங்கிணைக்கும் சிறப்பு செயல்குழுவையும் அது அமைத்துள்ளது என்று
அவர் குறிப்பிட்டார்.
குழந்தை பராமரிப்பு மையங்களை பதிவு செய்வது தொடர்பான
விவகாரங்களை மேலும் ஆக்ககரமான முறையில் கையாள்வது
தொடர்பில் மாநில நிலையில் நாங்கள் விவாதித்து வருகிறோம்.
அதே சமயம் சமூக நலத் துறையின் வாயிலாக அம்மையங்களின்
செயல்பாடுகளை கவனித்து வருகிறோம் என்றார் அவர்.
கடந்தாண்டு நவம்பர் வரை 980 குழந்தை பராமரிப்பு மையங்கள் சமூக
நலத்துறையில் பதிவு செய்துள்ள வேளையில் மேலும் 135 மையங்கள்
லைசென்ஸ் இன்றி செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர்
சொன்னார்.


