(ஆர்.ராஜா)ஷா ஆலம், ஜன. 7-
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக கழகத்துடன் (பி.கே.பி.எஸ்.) இணைந்து செகி ஃபிரெஷ் பேரங்காடி நடத்தி வரும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை தாமான் ஸ்ரீ மூடாவில் அதிக அளவில் நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.இந்த மலிவு விலை விற்பனைக்கு இப்பகுதி மக்கள் வழங்கி வரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்த விற்பனைத் திட்டத்தை இங்கு தொடர்ந்து நடத்துவதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ரஹ்மா ஏஹ்சான் மலிவு விற்பனைத் திட்டத்தை பி.கே.பி.எஸ்.உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் நடத்தி வரும் அதே வேளையில் செகி ஃபிரெஷ் பேரங்காடியுடன் இணைந்தும் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்து வருகிறது.
தாமான் ஸ்ரீ மூடாவிலும் செகி ஃபிரெஷ் பேரங்காடி அமைந்துள்ளதால் இந்த கூட்டு மலிவு விற்பனைத் திட்டத்தை இங்கும் ஏற்பாடு செய்வது நமக்கு எளிதாகியுள்ளது. இந்த மலிவு விற்பனையை இங்கு அடிக்கடி நடத்துவது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ மூடா செகி ஃபிரெஷ் பேரங்காடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலிவு விற்பனையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம்
அமல்படுத்தியுள்ளது.
மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி
ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.
சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம்
மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் முட்டை. கோழி, இறைச்சி, மீன், சமையல் எண்ணெய், அரிசி
உள்ளிட்ட பொருள்கள் மலிவான விலையில் விற்கப்படுகின்றன.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
SELANGOR
செகி ஃபிரெஷ் பேரங்காடியின் ஆதரவுடன் ஸ்ரீ மூடாவில் மலிவு விற்பனை – கவுன்சிலர் ராமு தகவல்
7 ஜனவரி 2025, 8:31 AM



