ஷா ஆலம், ஜன. 7 - இளைஞர்களுக்காக பிரத்தியேகப் தலைமைத்துவப்
பயிற்சிக்கு பத்து தீகா சட்டமன்றத் தொகுதி ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும்
பிப்ரவரி தொடங்கி மே மாதம் வரை நடைபெறவிருக்கும் இந்த
தலைமைத்துவ பயிற்சியில் பத்து தீகா தொகுதியில் வசிக்கும் 18 முதல்
26 வயது வரையிலான இளைஞர்கள் பங்கேற்கலாம்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை இளைஞர்கள்
அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்துவது மற்றும் இளம்
தலைமுறையினரின் திறமையைப் பட்டைத் தீட்டுவது ஆகிய
நோக்கங்களின் அடிப்படையில் இந்த பயிற்சி நடத்தப்படுவதாக தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷிட் கூறினார்.
பத்து தீகா தலைமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த பயிற்சியில்
18 முதல் 26 வயது வரையிலான 30 இளைஞர்கள் பங்கேற்பதற்குரிய
வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறோம். இப்பயிற்சியின் மூலம் அவர்கள்
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து
கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொது கொள்கைகள் தொடர்பில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சட்டமன்ற
உறுப்பினர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்குரிய வாய்ப்பினை இந்த
பயிற்சியின் பங்கேற்பாளர்கள் பெறுவர். அதே சமயம், பத்து தீகா தொகுதி
சமூக இயக்கத்தின் உறுப்பினர்களாக ஆவதற்குரிய வாய்ப்பும் அவர்களுக்கு
வழங்கப்படும் என்றார் அவர்.
இந்த பயிற்சியில் பத்து தீகா தொகுதியை வசிப்பிட முகவரியாகக்
கொண்டவர்கள் கலந்து கொள்ள முடியும் எனக் கூறிய அவர்,
பங்கேற்பாளர்களுக்கு நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்
என்றார்.


