ஷா ஆலம், ஜன 6: எதிர்வரும் ஜனவரி 13 முதல் இந்த ஆண்டுக்கான எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்
நேற்று தொடங்கி 12 நாட்களுக்கு வாகனம் மற்றும் பொருள் கிடங்கு பராமரிப்புக்காக எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று பிகேபிஎஸ் அறிவித்துள்ளது.
“புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பொது விடுமுறை மற்றும் வாகனம், பொருள் கிடங்கு பராமரிப்பு காரணங்களுக்காக இத்திட்டம் ஜனவரி 1 முதல் 12 வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான ஆறு முக்கியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இத்திட்டத்தில் இவ்வாண்டு முதல் அதன் எண்ணிக்கை 12ஆக அதிகரிக்கப்படுள்ளதாக வேளாண் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
பட்ஜெட் 2025-இல் இத்திட்டத்தை செயல்படுத்த RM30 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைச் செலவுகளின் சுமையை குறைக்க உதவும் மாநில நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
பட்ஜெட் 2025யை தாக்கல் செய்யும் போது, இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 10 எஹ்சான் மார்ட் பல்பொருள் அங்காடி கடைகளை திறக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.


