ஷா ஆலம், டிச. 4 - ஷா ஆலம் மாநகர் மன்றம் உருவாக்கப்பட்டு 25
ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு மாநகர் மன்றம்
திட்டமிட்டுள்ளது.
இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு முன்னுரிமை அளிக்கப்படும்
திட்டங்களில் சாலைகள் மற்றும் வடிகால்கள் மற்றும் பொது
போக்குவரத்தை தரம் உயர்த்துவது மற்றும் வெள்ளத் தடுப்புத்
திட்டங்களை அமல்படுத்துவதும் ஆகும் என்று ஷா ஆலம் டத்தோ
பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.
நாங்கள் பத்து முன்னோடித் திட்டங்களை தயார் செய்துள்ளோம். செக்சன்
17இல் பம்ப் பொருத்துவது, செக்சன் 32இல் கூடுதல் தடத்தை
உருவாக்குவது, செக்சன் 25 மற்றும் செக்சன் 33இல் கழிவு நீர் மற்றும
வடிகால் முறையை மேம்படுத்துவது ஆகியவை அவற்றில் அடங்கும் என
அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, செக்சன் யு20 மற்றும் செக்சன் 5இல் நீர் சேகரிப்பு குளங்களை
மேம்படுத்துவது, செக்சன் யு12 பகுதியிலிருந்து செக்சன் 7 செல்லும்
சஹாயா ஆலம் சுரங்கப் பாதை சந்திப்பை தரம் உயர்த்துவது ஆகியப்
பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
பசுமை சார்ந்த அடிப்படை வசதித் திட்டங்களை அமல்படுத்துவதிலும்
மாநகர் மன்றம் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறிய அவர், பொழுது
போக்கு பூங்கா, பாதசாரிகளுக்கான நடைபாதை மற்றும் சைக்கிள் தடம்
அமைப்பதும் அத்திட்டங்களில் அடங்கும் என்றார்.
கைவிடப்பட்ட பூனைகள் மற்றும் நாய்களை பாதுகாப்பதற்காக ஷா
ஆலமில் ஒருங்கிணைந்த விலங்குகள் மேலாண்மை மையத்தை மாநகர்
மன்றம் முதன் முறையாக உருவாக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு தொந்தரவாக இருப்பதாக புகார் கூறப்படும் நாய்,
பூனை போன்ற விலங்குகளுக்கு புகலிடம் தருவதற்கு இந்த
ஒருங்கிணைந்த மையத்தை உருவாக்கவிருக்கிறோம் என்று அவர்
கூறினார்.
ஷா ஆலம் கடந்த 2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மாநகர் மன்ற
அந்தஸ்தைப் பெற்றது. சிலாங்கூரில் மாநகர் அந்தஸ்தைப் பெற்ற முதல்
ஊராட்சி மன்றமாக ஷா ஆலம் விளங்குகிறது.


