புத்ராஜெயா, ஜன. 2 - நாளை தொடங்கி ஆறு மாத காலத்திற்கு மூன்று வகையான குற்றங்களுக்கு 150 வெள்ளி சமவிகித அபராதத் தொகையை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) விதிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த சிறப்பு சம விகித அபராதம் சில வகையான ஜே.பி.ஜே. குற்ற அறிக்கைகளை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
அவாஸ் (AwAS) கேமரா முறையில் பதிவு செய்யப்பட்ட வேக வரம்பு மீறல் மற்றும் சிவப்பு சமிக்ஞை விளக்கு மீறலை உட்படுத்திய 53ஏ சம்மன்கள், (AwAS சம்மன்கள்), 114 அறிக்கை (நேர்காணல் அறிவிப்பு), மற்றும் 115 அறிக்கை ( ஜே.பி.ஜே.வின் ஸ்டிக்கர் சம்மன் அறிவிப்பு) ஆகியவையே அந்த மூன்று குற்றங்களாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த சிறப்புச் சலுகை அபராதத்தை ஜே.பி.ஜே. முகப்பிடங்கள், கியோஸ்க்குகள், பொது அகப்பக்கங்கள் மற்றும் மைஜே.பி.ஜே. செயலி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மூலம் செலுத்தலாம் என்று அவர் இன்று அத்துறையின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவில் அவர் தெரிவித்தார்.
எனினும், மைஇஜி அல்லது போஸ் மலேசியா வழியாக சிறப்பு அபராதத் தொகையை செலுத்த முடியாது என்று லோக் மேலும் கூறினார்.
"இந்த மூன்று குற்ற அறிக்கைகளுக்கான வழக்கமான அபராதம் பொதுவாக 300 வெள்ளியாகும். பொது மக்கள் நிலுவையில் உள்ள சம்மன்களைச் செலுத்துவதற்கு அனுமதிக்கும் வகையில், ஜனவரி 3ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு இந்த சிறப்பு அபராதச் சலுகையை அறிமுகப்படுத்துகிறோம்.
தற்போது 20 லட்சம் AwAS சம்மன்கள் நிலுவையில் உள்ளன. இந்த சம்மன்களை அவர்கள் தீர்க்கத் தவறினால் அவர்கள் ஓட்டுநர் அல்லது மோட்டார் வாகன உரிமங்களை புதுப்பிக்க முடியாது என்று அவர் கூறினார்.


