ஷா ஆலம், டிச. 30 - அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின்
(எம்.பி.ஏ.ஜே.) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மலைச்
சாரல்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன.
நிலச் சரிவு சம்பவங்களைத் தடுப்பதற்கும் பொது மக்களின் பாதுகாப்பை
உறுதி செய்வதற்கும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்பாங் ஜெயா
நகராண்மைக் கழகத் தலைவர டாக்டர் அனி அகமது கூறினார்.
அதோடு மட்டுமின்றி, கட்டுமானப் பகுதிகளை அணுக்கமாக கண்காணித்து
வரும் அதே வேளையில் அங்கு பாதுகாப்பையும் உறுதி செய்யும்படி
அனைத்து மேம்பாட்டார்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
தாமான் மெலாவத்தி, ஜாலான் இ6 பகுதியில் கடந்த அக்டோபர் மாதம்
ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் குறித்து கருத்துரைத்த அவர், அப்பகுதியில்
வடிகால்களை சீரமைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி
முற்றுப் பெற்றதாகக் கூறினார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டி அகற்றும் பணி கடந்த
அக்டோபர் மாதம் 20ஆம் தேதி முற்றுப் பெற்றது. அங்குள்ள
மலைச்சாரலை பராமரிக்கும்படி அதன் நில உரிமையாளருக்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
அம்பாங் ஜெயாவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளவை என
அடையாளம் காணப்பட்ட 600 இடங்களில் சிவப்பு மண்டலங்களாக
வகைப்படுத்தப்பட்ட 114 பகுதிகளில் ஒன்றாக தாமான் மெலாவத்தி
ஜாலான் இ6 விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
முன்னதாகக் கூறியிருந்தார்.
மேலும் 400 இடங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அல்லது ஆபத்து
உள்ளவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும்
தெரிவித்திருந்தார்.
கடும் மழையின் காரணமாக புக்கிட் மெலாவத்தியில் ஏற்பட்ட
நிலச்சரிவினால் அந்த குடியிருப்பு பகுதியிலுள்ள 20 குடும்பங்களுக்கு
வீடுகளைச் காலி செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


