புத்ராஜெயா, டிச. 28- போக்குவரத்து குற்றங்களைப் புரிவோரை அடையாளம் காணும் பணியை ஆக்க கரமான முறையில் மேற்கொள்வதற்கு ஏதுவாக இலக்கவியல் முறையிலான அமலாக்க நடவடிக்கைகளை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அதிகரிக்கவுள்ளதோடு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப பயன்பாட்டையும் பரிசீலிக்கவிருக்கிறது.
அதிகரித்து வரும் மரண சாலை விபத்துகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.
முக்கிய இடங்களில் குறிப்பாக, நெடுஞ்சாலைகள் மற்றும் அதிக விபத்துகள் நிகழும் பகுதிகளில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை அமலாக்க அதிகாரிகள் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் வாயிலாக அமலாக்க நடவடிக்கைகளின் ஆக்கத் தன்மையை அதிகரிக்கவும் போக்குவரத்துக் குற்றங்களைக் குறைக்கவும் இயலும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சாலை விதிகளைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பொது விழிப்புணர்வு இயக்கத்தை ஜே.பி.ஜே. பெரிய அளவில் நடத்தவுள்ளதாகவும் ஏடி ஃபாட்லி குறிப்பிட்டார்.
இளம் வாகனமோட்டிகளையும் விபத்துகளுக்கான சாத்தியம் அதிகம் உள்ளத் தரப்பினரையும் இந்த விழிப்புணர்வு இயக்கம் முக்கிய இலக்காக க் கொண்டிருக்கும். பாதுகாப்பு வார்ப் பட்டை அணிவது, பாதுகாப்பான வேகத்தில் பயணிப்பது மற்றும் சாலையில் பொறுப்புணர்வுடன் செயல் படுவது ஆகிய அம்சங்கள் மீது இந்த இயக்கத்தில் கவனம் செலுத்தப் படும் என்றார் அவர்.
நாடு முழுவதும் சாலைகளின் உள்கட்டமைப்புத் தரத்தை உயர்த்துவதற்கும் அனைத்து வாகனங்களும் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கும் இதர அரசு துறைகளுடன் ஜே.பி.ஜே. ஒத்துழைக்கும் என்றும் அவர் சொன்னார்.


