ஷா ஆலம், டிச. 24- மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்
முயற்சியாக அடுத்தாண்டு தொடங்கி சிலாங்கூர் மாநிலத்திலுள்ள
அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மூத்த குடிமக்கள் நடவடிக்கை
மையம் அமைக்கப்படும்.
ஆயுள் அதிகரிப்பின் காரணமாக நாடு முதுமை நிலையை
எதிர்கொள்வதை கருத்தில் கொண்டு சமூக நலத் துறை மற்றும் அரசு
சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த மையம் அமைக்கப்படுவதாக
சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
தற்போது சிலாங்கூரிலுள்ள உள்ள இத்தகைய 16 மையங்களை சமூக
நலத் துறை நிர்வகித்து வருகிறது. அனைத்து நாடாளுமன்றத்
தொகுதிகளிலும் தலா ஒரு மையத்தை அமைக்க நாங்கள்
திட்டமிட்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.
முதியவர்கள் மத்தியில் சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் முஸ்லீம்கள்
மத்தியில் சமய அறிவை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஆன்மீக மேம்பாட்டு
நடவடிக்கைகளை மேற்கொள்வதை இந்த மையம் பிரதான இலக்காக
கொண்டிருக்கும் என்று சிலாங்கூர் டிவியின் கலந்துரையாடல் நிகழ்வில்
அவர் கூறினார்.
கோல லங்காட் மற்றும் உலு சிலாங்கூரில் இத்தகைய மையங்கள்
அடுத்தாண்டு அமைக்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தொஸ்ரீ அமிருடீன்
ஷாரி கடத்ந நவம்பர் 16ஆம் தேதி கூறியிருந்தார்.
அம்பாங், பாயா ஜெராஸ், செத்தியா ஆலம், ஸ்ரீ கெம்பாங்கான் ஆகிய
இடங்களில் உள்ள மூத்த குடிமக்கள் நடவடிக்கை மையங்களில்
அடுத்தாண்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநில அரசு 400,000
வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


