கோம்பாக், டிச. 19 - லைசென்ஸ் விதிமுறைகளை மீறி செயல்பட்ட
காரணத்திற்காக குவாங் தொழில்பேட்டைப் பகுதியிலுள்ள எஃகு பதனீட்டுத்
தொழிற்சாலையை உடனடியாக மூட செலாயாங் நகராண்மைக் கழகம்
(எம்.பி.எஸ்.) உத்தரவிட்டுள்ளது.
அந்த தொழிற்சாலை லைசென்சில் குறிப்பிட்ட இடத்தில் அல்லாமல்
வேறு இடத்தில் செயல்படுவது சோதனையின் போது கண்டறியப்பட்டதாக
நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் அடி ஃபைசால் அகமது தர்மிஸி
கூறினார்.
அந்த தொழிற்சாலை 1ஆம் எண் கொண்ட முகவரியில் செயல்பட்டிருக்க
வேண்டும். ஆனால். 6ஆம் எண் கொண்ட இடத்தில் செயல்பட்டு வந்தது.
இது லைசென்ஸில் இடம் பெற்ற முகவரியிலிருந்து மாறுபட்டது. இது
கடுமையான விதிமீறல் என்பதால் அடுத்த அறிவிப்பு வரும்வரை அதன்
லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது என்று அவர் சொன்னார்.
அந்த தொழில்பேட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த
சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார். இந்த சோதனை நடவடிக்கையில் சுற்றுச்சூழல் துறை
மற்றும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த 30
உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.
காலை 11.30 மணி தொடங்கி பிற்பகல் 2.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட
இச்சோதனை நடவடிக்கையில் லைசென்ஸ் இன்றி செயல்பட்டது,
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் தொழிலியல்
கழிவுகளை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியது உள்ளிட்ட
குற்றங்களுக்காக நான்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்று அவர்
சொன்னார்.
சம்பந்தப்பட்ட வர்த்தக வளாகங்களுக்கு தலா 1,000 வெள்ளி அபராதம்
விதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், நகராண்மைக் கழகத்தின் விதிகளை
கடைபிடிக்காத முதலாளிகளுக்கு எதிராக தொழிற்சாலைகளை மூடுவது
உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
எச்சரித்தார்.


