(ஆர்.ராஜா)
சுபாங் ஜெயா, டிச.17- சுபாங் ஜெயா மாநகர் மன்ற (எம்.பி.எஸ்.ஜே.)
டத்தோ பண்டார் கிண்ண இரட்டையர் கேரம் போட்டி இங்குள்ள புத்ரா
ஹைட்ஸ், டேவான் ஹார்மோனியில் அண்மையில் நடைபெற்றது. இந்த
போட்டியை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்
சம்புநாதன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்த வருடாந்திரப் போட்டியில் 300 குழுக்கள் பங்கு கொண்டன. மேலும்
இந்த நிகழ்வில் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் உள்பட 600க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரகாஷ், இத்தகையப் போட்டி நிகழ்வுகள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழி வகுக்கும் அதேவேளையில்
இன நல்லிணக்கத்திற்கும் பங்காற்றுவதாகத் தெரிவித்தார்.
இதர சமூகத் திட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கக் கூடிய இந்த
நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த சுபாங் ஜெயா
மாநகர் மன்றம் மற்றும் மாநகர் மன்றத்தின் 7வது மண்டல
கவுன்சிலருக்கு தாம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர்
குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சுபாங் ஜெயா மாநகர் மன்ற துணை டத்தோ பண்டார்
முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி, மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும்
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


