ஷா ஆலம், டிச. 16- வெள்ளத்திற்குப் பிந்தைய உதவிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஊராட்சி மன்றங்கள் தன்னாவலர் அமைப்புகளை உட்படுத்தி ஏஹ்சான் மடாணி உதவிக் குழுவை சிலாங்கூர் கிளந்தான் மாநிலத்திற்கு அனுப்புகிறது.
மொத்தம் 130 உறுப்பினர்கள் மற்றும் தண்ணீர் லோரிகள், ரோரோ எனப்படும் குப்பை அகற்றும் தொட்டிகள் உள்ளிட்ட 45 தளவாடங்களை உள்ளடக்கிய இந்த துப்புரவுப் பணி நாளை தொடங்கி வரும் வியாழக்கிழமை வரை மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த ஏஹ்சான் மடாணி குழுவில் கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் பங்கேற்றுள்ளதாக க் கூறிய அவர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது வசதிகள் மற்றும் வீடுகளை துப்புரவு செய்யும் பணியில் இந்நிறுவனம் ஈடுபடும் என்றார்.
மக்கள் மற்றும் இட வேறுபாடின்றி அக்கறை காட்டும் மாநில அரசின் கொள்கைகேற்ப இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. முக்கிய இடங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) ஆலோசனையின் பேரில் பள்ளிவாசல், சூராவ் போன்ற இடங்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என்றார் அவர்.
மனித ஆற்றல் ரீதியான உதவிகள் தவிர்த்து எம்.பி.ஐ. அறவாரியத்தின் ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் மற்றும் வீடுகளைச் சுத்தம் செய்யும் பொருள்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவிருக்கிறோம். இந்த பணியை மேற்கொள்வதற்கு சுமார் 400,000 வெள்ளி வரை செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், ஊராட்சி மன்றங்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த பணிக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர் என்று அவர் சொன்னார்
இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற வெள்ள நிவாரண உதவிக் குழுவை கிளந்தான் மாநிலத்திற்கு அனுப்பும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்


