ஷா ஆலம், டிச. 13- கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கப்பட்ட ஈக்கான் பண்டராயா (பிளேக்கோ) எனப்படும் அழுக்கு உண்ணி மீன்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் இயக்கம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து அவ்வியக்கம் இம்மாதமும் தொடரப் படவுள்ளது.
இந்த மீன்களைப் பிடிக்கும் இயக்கம் ஸ்ரீ கெம்பாங்கான் அருகே உள்ள சுங்கை குய்யோ துணை ஆற்றில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த இயக்கத்தின் பிடிக்கப்படும் ஒவ்வொரு கிலோ பண்டாராயா மீனுக்கும் ஒரு வெள்ளி வெகுமதி வழங்கப்படும். ஆறுகளில் நீடித்த சூழியல் முறையை உறுதி செய்வது மற்றும் அந்நிய மீன்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் மாநில அரசு இந்த மீன்பிடி இயக்கத்தை நடத்தி வருவதாக அவர் சொன்னார்.
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் இந்த மீன்பிடி இயக்கம் டெனாய் சுங்கை கெபங்சஹான், சுங்கை லங்காட் ஆகிய ஆறுகளில் மேற்கொள்ளப் பட்டதாகக் கூறிய அவர், 100க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட இந்த இயக்கத்தின் மூலம் 4,467 கிலோ மீன்கள் பிடிபட்டன என்றார்.
பண்டராயா வகை மீன்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அம்மீன்களைப் பிடிப்போருக்கு வெகுமதி வழங்கும் இயக்கத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் அறிவித்தார். இந்த மீன்கள் முட்டையிடுவதற்கு பூமியில் துவாரமிடுவதால் ஆற்றின் கரைகளும் தடுப்பணைகளும் சரிந்து விழும் சம்பவங்கள் நிகழ்வதாக அவர் கூறியிருந்தார்.


