ஷா ஆலம், டிச. 13- தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்குவதற்கு
நீடித்த செயல்முறையை அமல்படுத்துவதற்கான சாத்தியத்தை மாநில
அரசு கண்டறிந்து வருகிறது. எதிர்காலத்தில் சொந்த வங்கியை
அமைப்பதும் அதில் அடங்கும்.
உலகின் முன்னணி சிறுதொழில் கடனுதவி வங்கியான கிராமின்
வங்கியின் நிறுவனர் பேராசிரியர் முகமது யூனுஸுடன் அண்மையில்
நடத்திய சந்திப்பின் போது இந்த எண்ணம் உருவானதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நாற்பது நாடுகளில் கிளைகளை நிறுவியுள்ள அந்த வங்கியின் வெற்றியின்
இரகசியம் குறித்து அவரிடம் நான் வினவினேன். இத்தகைய நிதிக்
கழகங்கள் பொது அல்லது அரசாங்க நிதியை எப்போதும் சார்ந்திருக்கக்
கூடாது என்பது அவர் கொடுத்த முக்கிய ஆலோசனையாகும். இதன்
அடிப்படையில் அந்த இலக்கை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்
என அவர் சொன்னார்.
நமது இலக்கு இன்றோ அல்லது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கோ
தெளிவற்றதாக இருக்கலாம். ஆனால் பத்தாண்டுகளில் சுமையளிக்காத
வகையில் கடனுதவி வழங்கக் கூடிய சொந்த வங்கியை நாம்
கொண்டிருப்பது நமது இலக்காக உள்ளது என்றார் அவர்.
இங்குள்ள ஐடியல் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 2024 சிறந்த
ஹிஜ்ரா தொழில்முனைவோர் விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய
போது அமருடின் இவ்வாறு சொன்னார்.
சாதனைகள் புரிந்த தொழில்முனைவோரைப் பாராட்டும் விதமாக
நடத்தப்பட்ட இந்த விருதளிப்பு நிகழ்வில் இளைஞர் மற்றும்
விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி
டத்தோ மெரியா ஹம்சா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அண்மைய மாதங்களில் கடனுதவி தொடர்பான விண்ணப்பங்களுக்கு
ஹிஜ்ரா சிலாங்கூர் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாக பலர்
தம்மிடம் கூறியுள்ளதாக அமிருடின் கூறினார்.
கடன் பெற்ற சிலர் நடப்பிலுள்ள முறையை தவறாகப் பயன்படுத்திக்
கொள்வதோடு கடனைத் திரும்பச் செலுத்தவும் மறுக்கின்றனர். இதனால்
அந்த நிறுவனத்திற்கு பெரும் சுமை ஏற்படுகிறது. ஆகவே, இந்த
கடுமையான விதிமுறைகள் அவசியம் தேவைப்படுகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.


