ஷா ஆலம், டிச. 13- சிலாங்கூரில் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கான
திட்ட இலக்கை வெற்றியடையச் செய்வதற்காக மாநில அரசு 2 கோடி
வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இறக்குமதி உணவுப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பதைத்
தவிர்ப்பதற்கும் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற உதவுவதற்கும்
ஏதுவாக நவீன மற்றும் உயர் மதிப்பிலான விவசாயம் மீது அரசு கவனம்
செலுத்தி வருகிறது என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
சிலாங்கூர் வேளாண்மை உருமாற்றத் திட்டக் கொள்கையின் (பேத்தா)
வாயிலாக விவசாய உற்பத்தியையும் விவசாயிகளின் வருமானத்தையும்
நாங்கள் அதிகரிக்கவிருக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள்
உயர் மதிப்பிலான விவசாயத் திட்டங்களில் ஈடுபடுவதை நாங்கள்
ஊக்குவிக்கிறோம் என்று அவர் குறிப்பட்டார்.
புறக்கணிக்க முடியாத வியூக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக
விவசாயத் துறை விளங்குவதால் இதர தொழில்துறைகளுக்கு ஈடாக
உணவுத் தொழில்துறையும் வளர்ச்சி காண்பதை உறுதி செய்ய
விரும்புகிறோம். ஆகவேதான் உற்பத்தி அதிகரிப்பு எங்களின் பிரதான
இலக்காக இருந்து வருகிறது என்றார் அவர்.
நேற்று மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அக்ரோ
சிலாங்கூர் செயலி அறிமுகம் மற்றும் விவசாய உதவி வழங்கும்
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர், மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த தனிபர்கள்
மற்றும் சங்கங்களுக்கு 25 லட்சம் வெள்ளி மதிப்பிலான விவசாய
ஊக்குவிப்புகளை வழங்கினார். மொத்தம் 401 பேர் இந்த உதவிகளைப்
பெற்றுக் கொண்டனர்.
விவசாய உபகரணங்கள், ஹைட்ரோபோனிக், அக்குவாபோனிக், கால்நடை
தீவனம், படகுகளுக்கான இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள்
விவசாயிகளுக்கு இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.


