ஷா ஆலம், நவ. 16- நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடருக்கான விவாத நேரம் அதிகரிக்கப்படவுள்ளது.
அவை உறுப்பினர்கள் 2025 விநியோக மசோதா மற்றும் 2024 கூடுதல் விநியோக மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு போதுமான கால அவசாசத்தை வழங்கும் நோக்கில் இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் கூறினார்.
வரும் நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத் தொடரின் காலத்தை மிச்சப்படுத்துவதற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கு போதுமான நேரத்தை வழங்குவதற்கும் ஏதுவாக வரும் திங்கள்கிழமை தொடங்கி விவாத நேரம் அதிகரிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இவ்விரு சட்ட மசோதாக்களும் இரண்டாம் வாரத்தில் அதாவது நவம்பர் 25 முதல் 28 வரை விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்ட தாக்கல் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனத் தெரிவித்தார்.
இந்த கூட்டத் தொடருக்காக உறுப்பினர்களிடமிருந்து 854 கேள்விகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அவற்றில் 432 வாய்மொழிக் கேள்விகளும் 422 எழுத்துப்பூர்வ கேள்விகளும் அடங்கும் என்றார்.
இதனிடையே, கேள்வியாக அல்லாமல் அறிக்கை வடிவில் இருந்த காரணத்திற்காக 10 எழுத்துப்பூர்வ கேள்விகளும் நான்கு வாய்மொழிக் கேள்விகளும் இம்முறை நிராகரிக்கப்பட்டன என்று லாவ் குறிப்பிட்டார்.








