ஷா ஆலம், அக். 19- பிரதமர் நேற்று தாக்கல் செய்த 2025 வரவு செலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள் சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக பொருளாதார, மேம்பாடு, அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் தெரிவித்தார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் வலுவான அடித்தளம் இடப்பட்டதன் வழி சிலாங்கூர் தொடர்ந்து தேசிய பொருளாதார உந்து சக்தியாக விளங்கும் என்பதோடு நிலையான மற்றும் முழுமையான பொருளாதார வளர்ச்சியையும் காணும் என்று அவர் சொன்னார்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் மையப் புள்ளிகளாக விளங்கும் தளவாடப் போக்குவரத்து, ஹலால் மற்றும் விமானத் துறையில் ஆக்கத் திறனளிப்புக்கு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சியை 6.7 விழுக்காட்டிலிருந்து 7.0 விழுக்காடாக உயர்த்துவதற்கு இது தொடர்ந்து உதவி புரியும். இதன் வழி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் முதன்மை பங்களிப்பாளராக தொடர்ந்து விளங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சில அடிப்படை வசதித் திட்டங்கள் மாநிலத்தின் பாதுகாப்பையும் உலக அரங்கில் அதன் போட்டியிடும் ஆற்றலையும் மேம்படுத்த உதவும் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
அத் திட்டங்களில் நீண்ட காலமாக காத்திருந்த லங்காட் 2 வெள்ளத் தடுப்புத் திட்டம், கிள்ளான் துறை முக விரிவாக்கம் ஆகியவையும் அடங்கும் என்றார் அவர்.








