ஷா ஆலம், அக். 4- கடந்த ஜூன் மாதம் வரை மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் நடைபெற்ற ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தை நிகழ்வுகளில் பங்கேற்றவர்களில் மொத்தம் 466 பேர் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
வேலை தேடுவோருக்கு கூடிய விரைவில் வேலை கிடைப்பதில் உதவும் நோக்கில் மாநில அரசு எடுத்துள்ள முயற்சிக்கு உரிய பலன் கிடைத்துள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
மாநில மக்கள் வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தும மாநில அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வேலை வாய்ப்புச் சந்தை விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வேலை வாய்ப்புச் சந்தை நாளை கிள்ளானில் நடைபெறுகிறது.
பொது மக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.
கிள்ளான், டேவான் ஹம்சாவில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்றார் அவர்.
இங்கு உடனடி நேர்காணலில் பங்கேற்பதற்கு ஏதுவாக தங்களின் சுயவிபரக் குறிப்பின் நகலை மறவாது உடன் கொண்டு வருமாறு வேலை தேடுவோரை அவர் கேட்டுக் கொண்டார்.
வேலை தேடுவோர் தங்களின் சுயவிபரக் குறிப்பை சரி செய்வதற்கான முகப்பிடங்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.
ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஜெலாஜா ஜோப் கேர் சிலாங்கூர் நிகழ்வுகளின் வாயிலாக 35,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று பாப்பாராய்டு முன்னதாக கூறியிருந்தார்.








