கோலாலம்பூர், செப். 21- வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் மக்களவைக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வரும்படி எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்தார்.
அன்வார் பதவி விலக வேண்டும் என 30 பேர் வெறுமனே கூச்சலிடுகிறார்கள், நாடு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக் கொண்டுள்ள கூட்டம் சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை. என்னை வெளியேற்ற வேண்டுமா? தாராளமாகச் செய்யுங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
தாம் பதவியிலிருந்து விலக வேண்டுமானால் அந்த எதிர்க்கட்சி கூட்டணி முறையான சட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வரும் அக்டோபர் மாத மத்தியில் (அக்டோபர் 14ஆம் தேதி) தீர்மானத்தை கொண்டு வாருங்கள். பிரதமர் என்ற முறையில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வாருங்கள். கால அவகாசம் போதவில்லையா? பாதகமில்லை. அந்த தீர்மானத்தை நான் அங்கீகரிக்கிறேன் என்று அவர் சொன்னார்.
நேற்றிரவு இங்குள்ள புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரங்கில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் மக்கள் குரல் வேதக் குரல் எனும் பேரணியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்கு கட்சி மீண்டும் வலுப்பெற வேண்டும் என்பதோடு இயந்திரத்தையும் வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மந்தமான மக்கள் பிரதிநிதிகளை மாற்றுவோம். அடித்தட்டு மக்களின் போராட்டம், துயரம், கண்ணீர், காயங்களிலிருந்துதான் பிரதமராக அன்வாரும் மந்திரி பெசார்களும், அமைச்சர்களும், இதரத் தலைவர்களும் உருவாகியுள்ளோம்.
இயந்திரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடருங்கள். நாங்கள் அனைத்தையும் கடந்து விட்டோம் என்ற இறுமாப்பில் அச்சுறுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் நிறுத்துங்கள். நாம் அனைவரும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். கட்சியை வலுப்படுத்தி ரிபோர்மாஸி உணவை எழுச்சி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.








