ஷா ஆலம், மார்ச் 21- சிலாங்கூரில் ஒற்றுமை அரசு வலுவுடன் இருப்பதை உறுதி செய்வதில் அந்த கூட்டணியிலுள்ள கட்சிகளிடையே காணப்பட்ட கருத்திணக்கம் முக்கிய பங்கை வகிப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூரையும் ஒட்டுமொத்த மலேசியாவையும் வழிநடத்துவதற்கு ஏதுவாக வலுவான கருத்திணக்க உணர்வு சரியான தடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
தற்போது நாம் அவநம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சியை எதிர்கொண்டுள்ளோம். அவர்கள் உரக்க குரல் எழுப்பினாலும் மேலும் நம்பிக்கையற்றவர்களாக அவர்கள் ஆகி வருவதற்கு அதுவே சான்றாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஆகவேதான் நாம் வலுவாகவும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்பதோடு வலுவையும் ஒன்று திரட்ட வேண்டும் என விரும்புகிறேன். அனைவருக்கும் நியாயமாக நடந்து கொள்வதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள மந்திரி புசாரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத் தலைவர்களுடனான நோன்பு துறக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொகுதி பங்கீடு ( ஒற்றுமை அரசின் உறுப்புக் கட்சிகளுக்கிடையில்) போன்ற மிகவும் சிக்கலான விவகாரங்களை கையாளும் போதும் எந்தவொரு சிக்கலுமின்றி தீர்வு காண்பதற்கான ஆற்றல் நமக்கு உள்ளதாக நம்புகிறேன் என்றார் அவர்.
அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் ஒற்றுமை அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் இஷாம் ஹஷிம், சிலாங்கூர் மாநில அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.








