கோத்தா பாரு, நவம்பர் 16 - வடகிழக்கு பருவமழை காலத்தில் படகுகளைப் பயன்படுத்தி வெள்ள நிவாரண உதவிகளை வழங்க விரும்பும் எந்தவொரு தரப்பினரும் அல்லது தனி நபரும், உதவி நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன் ஜே.பி.பி.எம் மற்றும் காவல்துறைகளிடம் தெரிவிக்குமாறு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜே.பி.பி.எம்) கேட்டுக்கொள்கிறது.
ஜே.பி.பி.எம் டைரக்டர் ஜெனரல் டத்தோஸ்ரீ அப்துல் வஹாப் மாட் யாசின், பேரிடர் காலங்களில் உதவி தேவைப்படும் இடங்களில் சாதனங்களை உகந்த முறையில் பயன் படுத்துவதை உறுதிசெய்ய இது மிகவும் முக்கியமானது என்றார்.
பேரிடர் காலங்களில் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். இருப்பினும், அவர்களால் ஐ.பி.டி, யில் தெரிவிக்க முடியாவிட்டால், சம்பவ இடத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அவர்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படும், ”என்று அவர் இன்று ஜே.பி.பி.எம் இன்னோவேஷன் வீக் 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அப்துல் வஹாப், வெள்ளப் பேரிடர்களின் போது திணைக்களம் மற்றும் பிற மீட்பு நிறுவனங்களுக்கு உதவ பல்வேறு தரப்பினர் வழங்கிய உதவியை ஜே.பி.பி.எம் பெரிதும் பாராட்டுகிறது என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியின் போது அப் பகுதியின் சூழ்நிலைகள் மற்றும் வெளியேறும் மார்க்கம் அறிந்த திறமையான உள்ளூர் சமூகத்தின் உதவி மீட்பு நிறுவனங்களுக்கு தேவை என்று அவர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் போது அவர்களுக்கு உதவும் போதும் எளிதாகவும் வேகமாகவும் செய்ய அவர்களின் திறமைகள் எங்களுக்குத் தேவை" என்று அப்துல் வஹாப் கூறினார்.
வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ படகுகளுக்கு முறையான லைப் ஜாக்கெட் இருப்பதை உறுதி செய்யுமாறு தீயணைப்பு நிலையங்களுக்கு ஜேபிபிஎம் அறிவுறுத்தியுள்ளதாக நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
“படகுகளைப் பயன்படுத்துவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவ விரும்பினால், அவற்றில் லைஃப் ஜாக்கெட்டுகள் பொருத்தப்பட வேண்டும் என்று JBPM அனைத்து நிலையங்களுக்கும் தெரிவித்துள்ளது. படகில் குறைந்தது ஒரு மீட்பு நிறுவன தொடர்பு எண் வைத்திருக்க அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,” என்றார்.








