புத்ராஜெயா, நவ. 4 - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களின் தொகுதிகளுக்கான ஒதுக்கீடு கோரிக்கைகள் குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப்புடன் மீண்டும் விவாதம் நடத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மானிய ஒதுக்கீடுகள் குறித்து ஃபாடில்லா யூசோப்புடன் பேச்சுவார்த்தைகள் அல்லது கோரிக்கை வைப்பதை நிறுத்துவதாகக் கூறினர்.
"துணை பிரதமர் உடன் கலந்துரையாடுங்கள்," என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய குடும்ப மாத கொண்டாட்டம் 2023 க்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் பகுதிகளுக்கு ஒதுக்கீடு கோர விரும்பினால், பல்வேறு நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகளையும் பிரதமர் அன்வார் மறுத்தார்.
நேற்று, பேரிக்கான் நேஷனல் தலைமைக் கொறடா டத்தோஸ்ரீ தாகியுடின் ஹாசன், இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதற்கான முடிவை அறிவிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்து விவாதிப்பதற்காக இரண்டு முறை ஃபாதில்லாவைச் சந்தித்ததாகக் கூறினார்.








