ஷா ஆலம், நவ 17- இடைவிடாது பெய்த அடை மழை மற்றும் தடுப்பணை உடைந்ததால் ஏற்பட்ட நீர் பெருக்கு காரணமாக டிங்கில் வட்டாரத்திலுள்ள இரு கிராமங்களில் இன்று காலை வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் கம்போங் ஸ்ரீ தஞ்சோங்கில் 50 வீடுகளும் கம்போங் செம்பெராயில் 30 வீடுகளும் பாதிக்கப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.
கம்போங் ஸ்ரீ தஞ்சோங்கில் உள்ள மண் தடுப்பணை உடைந்த காரணத்தால் இன்று காலை 8.00 மணியளவில் சுங்கை லங்காட்டில் நீர் மட்டம் 8.2 மீட்டருக்கு உயர்ந்ததாக அது தெரிவித்தது.
கடுமையான மழை காரணமாக சுங்கை லங்காட் தாழ்நிலம் மற்றும் சுங்கை பாரிட் தம்போயில் நீர் மட்டம் உயர்வு கண்டு கம்போங் செம்பிரையில் வெள்ளம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு உடைத்த தடுப்பணையை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.


