கோல சிலாங்கூர், நவ 15- சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் சீராக நடைபெற்ற வருவதோடு மக்களின் ஆதரவும் அக்கூட்டணிக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தங்கள் தொகுதிகளில் பிரசார நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும்படி அனைத்து வேட்பாளர்களையும் மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
தபால் வாக்குகள் மற்றும் இயல்பாக வாக்காளராகும் முறையின் அமலாக்கம் காரணமாக இந்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதால் பிரசார நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
கம்போங் புக்கிட் கூச்சிங் தெங்கா சமூக மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற கோல சிலாங்கூர் மக்களுடனான விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளருமான அமிருடின், இதர வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக இன்று பல தொகுதிகளுக்கு வருகை புரியவிருக்கிறார்.
கோல சிலாங்கூர் தவிர்த்து, தஞ்சோங் காராங், உலு லங்காட், ஷா ஆலம், சுங்கை பூலோ ஆகிய தொகுதிகளில் அமிருடின் பிரசாரத்தில் ஈடுபடுவார்.
இப்பொதுத் தேர்தலில் ஹராப்பான் வெற்றி பெறுவதற்கு தேவைப்படும் கூடுதல் ஆதரவைத் திரட்டுவதற்காக தாம் இத்தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் அவர் குறிப்பிட்டார்.


