ஷா ஆலம், நவ 15- ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற போதிலும் வெற்றி வாய்ப்பு குறித்து பக்கத்தான் தேர்தல் இயந்திரம் எளிதில் மனநிறைவு கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் அந்த தொகுதி தொடர்ந்து பக்கத்தான் கூட்டணி வசம் இருப்பதை உறுதி செய்வதற்கு தேர்தல் பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.
ஷா ஆலம் தொகுதியை ஹராப்பான் தக்க வைத்துக் கொள்ள இயலும் என நம்புகிறேன். ஆனால் அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். எஞ்சியிருக்கும் ஐந்து அல்லது ஆறு நாட்களை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் சொன்னார்.

இந்த தொகுதியை எளிதாகவோ சௌகரியமாகவோ கருத வேண்டாம் என்று ஷா ஆலம் தொகுதி வேட்பாளர் அஸ்லி யூசுப்பிற்கு ஆதரவாக இங்குள்ள செக்சன் 18இல் பிரசாரம் செய்தபோது அவர் தெரிவித்தார்.
ஷா ஆலம் தொகுதி கடந்த மூன்று தவணைகளாக பக்கத்தான் வசம் உள்ளது மற்றும் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை இத்தொகுதியை இம்முறையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று அமிருடின் குறிப்பிட்டார்.
மாநில அரசின் வாயிலாக வழங்கிய சேவைகள் வாயிலாக வாக்காளர்களை ஈர்ப்பதற்குரிய ஆற்றலை நாம் கொண்டிருக்கிறோம் என பெரிதும் நம்புகிறேன் என்றார் அவர்.
இத்தொகுதியில் போட்டியிடும் பெரிக்கத்தான் நேஷனல் பாஸ் கட்சியின் பலத்தை நம்பியுள்ளதாக கூறிய அவர், இதன் காரணமாக அக்கூட்டணியிடமிருந்து கடும் போட்டியை பக்கத்தான் ஹராப்பான் எதிர்நோக்கும் சாத்தியம் உள்ளது என்றார்.


