உலு லங்காட், நவ 14- பக்கத்தான் ஹராப்பான் வசமிருக்கும் மூன்று மாநில அரசு நிர்வாகத்தில் முதிர்ச்சியான அரசியல் கலாசாரம் நீண்டகாலமாக வேரூன்றியுள்ளதாக கோல லங்காட் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் கூறுகிறார்.
ஜசெகவை சதா சாடுவதையும் இன விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்துவதையும் தொழிலாக கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களின் செயலை முகமது சானி ஹம்சான் சாடினார்.
சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் ஜசெகவுடன் அரசு நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. சிலாங்கூரில் நாங்கள் நீண்டகாலமாக ஜசெகவுடன் செயல்பட்டு வருகிறோம். மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ள ஜசெகவின் மூன்று ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கொள்கைகளை வகுப்பதில் உடனிருக்கின்றனர்.
இதுவரை எந்த கொள்கையும் எந்த இனத்தின் உணர்வையும் புண்படுத்தும் வகையில் அமைந்ததில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நேரம் நாம் அரசியல் முதிர்ச்சியும் சுபிட்சமும் உயர்நெறியும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
பண்டார் புக்கிட் மக்கோத்தாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய போது தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்லாத்தின் தோற்றதைக் கொண்டிருக்கும் பல தலைவர்கள் நிந்தனை கலாசாரத்தை பரப்புவது வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத அடையாளங்களையும் அடைமொழிகளையும் கொண்டிருப்பவர்கள் கருத்தை வெளியிடுவதற்கு முன்னர் நன்கு யோசிக்க வேண்டும். நாம் அரசியலில் மேலும் முதிர்ச்சியடைந்தவர்களாக இருக்க வேண்டும். அரசியல் கலாசாரம் விரிவடைய வேண்டுமே தவிர சுருங்கக் கூடாது என்று அவர் சொன்னார்.


