கோம்பாக், நவ 14- ஊழியர் சேம நிதியில் 50 வெள்ளியைச் சேர்ப்பதன் மூலம் சிலாங்கூர் அரசின் ரோடா டாருள் ஏசான் (ரைட்) திட்டம் தரம் இவ்வாண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக உணவு விநியோகச் சேவையில் ஈடுபட்டுள்ள 3,000 பேர் பயன் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தற்போது வழங்கப்படும் பி2 லைசென்ஸ் பெறுவதற்கான 350 வெள்ளி உதவித் தொகை, 150 வெள்ளி மதிப்பிலான உணவு விநியோகச் சேவை தொடர்பான இலவச பயிற்சி போன்ற சலுகைகளுடன் உபரியாக இந்த கூடுதல் சேம நிதி சேமிப்புத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இத்திட்டங்களின் வழி மொத்தம் 550 வெள்ளி மதிப்பிலானச் சலுகைகளை இத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அனுபவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தவிர, பத்தாயிரம் வெள்ளி காப்புறுதி பாதுகாப்பை வழங்கும் சிலாங்கூர் பொது காப்புறுதி திட்டத்தின் (இன்சான்) பங்கேற்பாளர்களாக இந்த ரைட் திட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு 200 ரைட் பங்கேற்பாளர்களுக்கு உதவிகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
உணவு விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் ரைட் திட்டத்தின் வாயிலாக 20 லட்சம் வெள்ளியை மாநில அரசு கடந்த 2022 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்தது.



