கிள்ளான், செப் 29- ஷா ஆலம், செக்சன் 18, ஸ்ரீ மகா படபத்தர காளியம்மன் ஆலயம் தற்போது அமைந்துள்ள அதே இடத்தில் நிலைநிறுத்தப்படும் என்று இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் பிரதிநிதி டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
இந்த ஆலய நிலத்தின் உரிமையாளரான கே.பி.ஜே. நிபுணத்துவ மருத்துவமனை நிறுவனத்திற்கு மாற்று நிலத்தை வழங்குவதன் மூலம் ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்துவதற்கான ஏற்பாட்டை மாநில அரசு மாவட்ட நில அலுவலகம் மூலம் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
மாநில அரசின் இந்நடவடிக்கையின் மூலம் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போதுள்ள சுமார் 4,000 சதுர அடி நிலத்தில் தொடர்ந்து இயங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசாங்கம் ஆலயத்தை அதே இடத்தில் தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு நில உரிமையாளரான கே.பி.ஜே. நிறுவனத்திற்கு வழங்குவதற்கான மாற்று நிலத்தை அதே இடத்தில் அடையாளம் காணும்படியும் நில அலுவலகத்தைப் பணித்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆலய நில விவகாரம் தொடர்பில் இன்று இங்குள்ள செந்தோசா தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆலய நிலம் பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் வசமிருந்து இந்த நிலம் கே.பி.ஜே. நிறுவனத்திற்கு கைமாறிய நிலையில் ஆலயத்தை அகற்றக் கோரும் கடிதத்தை அந்நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கியதாக குணராஜ் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் கே.பிஜே. உள்பட பல்வேறு தரப்பினருடன் தொடர்ந்து பேச்சு நடத்திக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக கே.பி.ஜே. நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
ஆலயத்தை அகற்றுவதற்கு இடப்பட்ட உத்தரவை ஆலய நிர்வாகம் பின்பற்றவில்லை எனக் கூறி ஷா ஆலம் உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை 25 ஆம் தேதி ஆலயச் செயலாளர் கே. பத்மநாபனுக்கு சிறைத்தண்டனை விதித்தது. மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு பிரதிநிதி என்ற முறையில் இவ்விவகாரத்தை நான் அவரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றேன்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நில அலுவலகம், ஷா ஆலம் மாநகர் மன்றம், கே.பி.ஜே. ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய இரு சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆலய நிலத்திற்கு பதிலாக கே.பி.ஜே. நிறுவனத்திற்கு மாற்று நிலத்தை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக மாநில அரசு வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பத்மநாபனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது என்று குணராஜ் குறிப்பிட்டார்.


