ஷா ஆலம், செப் 23- லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் துரித நடவடிக்கையினால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் நீர்த்தடத்தில் ஏற்பட்ட துர்நாற்றப் பிரச்னை விரைவாக கண்டறியப்பட்டது.
இந்த துரித நடவடிக்கையின் வாயிலாக ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டு நீர் சுத்திகரிப்பு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
ரவாங்கிலுள்ள சுங்கை கோங் பகுதியில் நீரில் கலந்துள்ள வாடையின் அளவு டோன் இரண்டு எனப் பதிவாகியிருந்தது நேற்றிரவு 8.30 மணியளவில் கண்டறியப்பட்டதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
நீரில் வாடை கலந்துள்ள இடத்திற்கும் ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு 20 கிலோ மீட்டராகும். நீர் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான துரித நடவடிக்கைகளை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உடனடியாக மேற்கொண்டது என்று அவர் தெரிவித்தார்.
அந்த சுங்கை கோங் நீரில் டீசல் போன்ற வாடை காணப்பட்டது. அருகிலுள்ள தொழில்பேட்டைப் பகுதிகளிலிருந்து அவை வெளியேற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார் அவர்.
ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் தாமான் பாயு பெர்மாய் பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றிலிருந்து டீசல் போன்ற திரவம் நீரில் கலந்துள்ளது கண்டறியப்பட்டது. அந்த நீரின் மாதிரிகள் சோதனைக்காக இரசாயன இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.


