ஷா ஆலம், ஆக 23- ஸ்ரீ குண்டாங் எம்.பி.எஸ். மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.
குவாங் தொகுதி நிலையிலான இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் சலாசியா டிசா ஏற்பாடு செய்திருந்ததாக சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர் அமைப்பு கூறியது.
இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்தை ஏற்பாடு செய்ததோடு அதனை முறையாக வழி நடத்திய சலாசியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அமைப்பு தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் கடந்த ஞாயிறன்று குவாங், புக்கிட் லஞ்சான், பத்து தீகா ஆகிய தொகுதிகளில் ஏக காலத்தில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனை திட்டத்தை மேற்கொள்வதற்கு மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல் பருமனானவர்கள், நோய்ப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றாதவர்களை இலக்காக கொண்டு இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.


