ECONOMY

சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மைய பராமரிப்பு பணி திட்டமிட்டபடி தொடங்கியது

9 ஆகஸ்ட் 2022, 4:37 AM
சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மைய பராமரிப்பு பணி திட்டமிட்டபடி தொடங்கியது

ஷா ஆலம், ஆக 9- சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி இன்று காலை 9.00 மணிக்கு தொடங்கியது.

இப்பணி இன்றிரவு 9.00 மணி மணியளவில் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும் என்று பெருங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக உலு சிலாங்கூர் மாவட்டத்தின் 188 பகுதிகளில் இன்று  நீர் விநியோகத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு லோரிகள் மூலம் நீரை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.

இந்த நீர் விநியோக நடவடிக்கையில் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் நல்லடக்கச் சடங்கு நடைபெறும் இடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அது தெரிவித்தது.

வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பின்னிரவு 1.00 மணியளவில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும்  எனவும் இடத்தின் தொலைவு மற்றும் நீர் அழுத்தத்தைப் பொறுத்து நீர் விநியோகம் கிடைக்கும் நேரம் மாறுபடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நீர் விநியோகத் தடை தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் http://www.airselangor.com  எனும் அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.