ECONOMY

உதவித் திட்ட பயணத் தொடர் மக்களைத் சந்திக்கும் தளமாக விளங்கும்- மந்திரி புசார்

23 ஜூன் 2022, 6:48 AM
உதவித் திட்ட பயணத் தொடர் மக்களைத் சந்திக்கும் தளமாக விளங்கும்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூன் 23- மாநில அரசின் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் பயணத் தொடர் மக்களைச் சந்திப்பதற்கும் நலத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குரிய ஒரு தளமாக விளங்கும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த வாரம் உலு லங்காட் மாவட்ட நிலையில் இந்த நலத் திட்ட விளக்கமளிப்பு நிகழ்வு நடைபெற்ற வேளையில் அடுத்தக் கட்டமாக வரும் 25 ஆம் தேதி கோல லங்காட்டில் இந்நிகழ்வு தொடரும் என்று அவர் சொன்னார்.

கால மாற்றத்திற்கேற்ப மாநில மக்களின் தேவை மற்றும் மாநிலத்தின் சுபிட்சத்திற்கேற்ப மக்கள் நலத் திட்டங்களும் விரிவாக்கம் காணும் என அவர் தெரிவித்தார்.

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டமானது மக்களை சந்திப்பதற்கும் மக்களுக்கு பயனளிக்கும் நலத் திட்டங்கள் குறித்த தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு தளமாக விளங்குகிறது என்றார் அவர்.

மக்கள் நலத் திட்டங்களை மறு அறிமுகம் செய்யும் நோக்கிலான இந்த முயற்சிக்கு சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் அல்லது இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் எனப் பெயரிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கடந்த வாரம் அம்பாங், தாமான் கோசாசில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு வரும் ஜூலை 2 ஆம் தேதி கோல சிலாங்கூர் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளது. வரும் ஜூலை 26 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற போலவாட் சதுக்கத்திலும் 31 ஆம் தேதி பத்து கேவ்ஸ் பொது திடலிலும் இந்நிகழ்வு நடைபெறும்.

காலை 7.30 மணி தொடங்கி மாலை 5. 30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் கலைஞர்களின் இசைப் படைப்புகள், ஏரோபிக் நிகழ்வு, சமையல் போட்டி, மக்கள் விளையாட்டு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும்.

அதிகமான மாநில மக்கள் பயன் பெறும் வகையில் பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு மாற்றாக 35 கோடி வெள்ளி நிதியில் புதிய திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது. சுமார் 25,000 பேர் பயன் பெற்று வந்த கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவு அன்னையர் திட்டத்திற்கு பதிலாக 30,000 பேர் பயன்பெறக்கூடிய பிங்காஸ் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இது தவிர, கடும் நோய்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஐயாயிரம் பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.